தஞ்சை அருகே குடிபோதையில் நடுரோட்டில் இளம்பெண் ரகளை: கல்லூரி மாணவியா?
தஞ்சை: தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு தஞ்சை அருகே அதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே இளம்பெண் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தள்ளாடினார். அவர் அந்த வழியாக வந்தவர்களிடம் ரகளை செய்தார்.
போதையில் ஆட்டம் போட்ட அவர் பற்றி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்த பிறகு பெண் போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றார். அந்த பெண் நின்றிருந்த இடத்திற்கு அருகே கல்லூரி உள்ளது. அதனால் அவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவியாக இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் இளம்பெண் போதையில் ஆட்டம் போட்டுள்ளார்.