கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை... வெளிவருமா உண்மைகள்?
நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் உடல் பிரேதப்பரிசோதனை இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இதற்காக அவரது பெற்றோர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேலம் வந்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ரவி. ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர். இவரது இரண்டாவது மகள் ஆர். விஷ்ணுபிரியா (27). சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு எழுதிய விஷ்ணுபிரியா அதில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வா னர். சிவகங்கையில் பயிற்சி முடித்த பின் கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் முதன்முதலில் டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தின்போது, அங்கு சென்ற டிஎஸ்பி விஷ்ணுபிரியா, அவர்களை சமாதானப்படுத்தினார். சம்பவ இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர் பணியில் இருந்துள்ளார். இதையடுத்து காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற அவர் அங்கு ஓய்வு எடுத்துள்ளார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கலந்து கொள்ள வேண்டும். இதற்காக, அவருடைய பாதுகாப்பு போலீசார், மொபைல் போன் மூலம், தகவல் தெரிவிக்க முயற்சித்துள்ளனர். பல முறை தொடர்பு கொள்ள முயன்றும், அவர் போனை எடுக்கவே இல்லை. மாலை, 6 மணிக்கு, பாதுகாப்பு போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று, கதவை தட்டியபோது, வீடு திறக்கப்படவில்லை.
இதையடுத்து, வீட்டின் பின்பகுதி ஜன்னல் வழியே, உள்ளே பார்த்தபோது, தன் படுக்கை அறையில், துப்பட்டாவால் துாக்கிட்டு, தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியில் உறைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நாமக்கல் எஸ்.பி., செந்தில்குமார், ஈரோடு எஸ்.பி., சிபி சக்கர வர்த்தி, சேலம் டி.ஐ.ஜி., வித்யா குல்கர்னி ஆகியோர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துவக்கினர்.
கடந்த, ஜூன், 24ல், இவர் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள பள்ளிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில், ஓமலுாரைச் சேர்ந்த, கோகுல்ராஜ் என்பவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதே நேரத்தில், கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாகக் கூறப்படும், திருச்செங்கோடு கோவிலும், இவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணையை, இவர் நேரடியாக நடத்தி வந்தார். வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட போதும், கூலிப்படையை ஏவிய, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் யுவராஜ், இன்னும் தலைமறைவாக உள்ளார்.அவரை தேடி பலமுறை போலீசார், யுவராஜ் வீட்டுக்கு சென்று வந்துள்ளனர். அவரை கைது செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சில அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன. அதே நேரத்தில், கோகுல்ராஜ் கொலை குற்றவாளிகள் தரப்பில் இருந்து, போலீசாருக்கும், டி.எஸ்.பி.,க்கும் மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த பின்னணி தான், டி.எஸ்.பி., தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இளம் டி.எஸ்.பி., தற்கொலை செய்து கொண்ட விவகாரம், காவல் துறையில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முன்னதாக விஷ்ணுபிரியா, 10 பக்கத்தில், ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தை, தன் டைரியில் வைத்திருந்தார். அந்த கடிதத்தை, ஆர்.டி.ஓ., மகாத்மா முன்னிலையில், எஸ்.பி., செந்தில்குமார் கைப்பற்றினார். அந்த கடிதத்தில், என்னுடைய தற்கொலைக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்குக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.
இந்ததுறை எனக்கு மிகவும் பிடித்தமானது தான்; நான்தான் பொருத்தம் இல்லாமல் இருக்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணம் அல்ல; என்னுடைய இறப்பை அரசியல் ஆக்க வேண்டாம்; 'போஸ்ட் மார்ட்டம்' செய்ய வேண்டாம்.போலீஸ் பணியில், என்னால் திறம்பட பணி செய்ய முடியவில்லை. இவ்வாறு எழுதி உள்ளார்.
தன் அப்பா, அம்மாவுக்கு எழுதியதில், 'நான் உங்களுடன் இணைந்து வாழ்ந்து, உங்களுக்கு சேவை செய்ய விரும்பினேன்; ஆனால், என்னால் உங்களுடன் வாழ முடியவில்லை' என, தெரிவித்துள்ளார்.'கோகுல்ராஜ் கொலை வழக்குக்கும், தனது தற்கொலைக்கும் தொடர்பு இல்லை' என, அதை மட்டும் குறிப்பிட்டு தெரிவித்து இருப்பதும், 'உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டாம்' என கூறி இருப்பதும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 2ம்தேதியன்று திருச்செங்கோடு டிஎஸ்பியாக பதவியேற்ற விஷ்ணு பிரியா, பொதுமக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பணிக்கு வந்த 7 மாதத்தில் இளம் போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.