குடிக்கிறார், வெளியில் கூட்டிச் செல்வதில்லை.. தற்கொலை செய்து கொள்கிறேன்.. ஆவடியில் அதிர்ச்சி!
கணவனே தற்கொலைக்கு காரணம் என இளம் பெண் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: திருமணம் முடிந்து ஆயிரம் கனவுகளுடன் கணவர் வீட்டுக்கு செல்லும் இளம் பெண்ணுக்கு, எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காவிட்டால் விளைவு விபரீதத்தையே தேடி செல்ல நேரிடுகிறது. இந்த ஆவடி சம்பவமும் அப்படித்தான்.
திருமுல்லைவாயலை சேர்ந்தவர் அருண் கணேஷ். இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ம் பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி. இவருக்கு வயது 23.
வாக்குவாதம் - தகராறு
சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில்தான் அருண்கணேஷ் ரேவதியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. ஹரிஷ் என்ற கைக்குழந்தையும் உள்ளது. திருமணமானது முதலே தம்பதிக்கு இடையில் ஓயாமல் சண்டைதான் இருந்துள்ளது. தினமும் தகராறு, வாக்குவாதத்தில் ரேவதி மனமுடைந்து போய்விட்டார்.
மனம் உடைந்த ரேவதி
இதனால் கொஞ்ச நாளாக யாருடனும் சரியாக பேசாமலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் குழந்தையை தூக்கிக் கொண்டு அருண் கணேஷ் மார்க்கெட்டுக்கு போனார். வீடு திரும்பி வந்து பார்த்தால், ரேவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து ரேவதியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையை துவக்கினர்.
உருக்கமான கடிதம்
அதன்படி வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, ரேவதி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில், "அருண் கணேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். என்னை கொடுமை செய்கிறார். என் மீது வெறுப்பையும் காட்டி வருகிறார். வெளி இடங்களுக்கும் அழைத்து செல்வதில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன்." இவ்வாறு ரேவதி எழுதியிருந்தார். இதையடுத்து போலீசார் உட்பட அம்பத்தூர் ஆர்.டி.ஓ.வும் இந்த விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
லவ் மேரேஜ்
ரேவதியின் கடிதம் அவரது விரக்தியின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. ரேவதியின் எதிர்பார்ப்பும் ஆசையும் நியாயமே. அதற்காக தற்கொலை தீர்வு கிடையாது. ரேவதியின் உடலை கண்டு அருண்கணேஷ் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே கண்கலங்க செய்தது. இத்தனைக்கும் இவர்கள் இருவரும் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டவர்களாம். வேறு வேறு சாதி என்பதால் இரு வீட்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒருமுறை ரேவதி நினைத்து பார்த்திருக்கலாம்.