இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார்...போலீஸ் விசாரணை !
கோவை: கோவையில் வயிற்று வலிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் ஜெப கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள சாந்திமேடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவி கடந்த ஒரு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் வீட்டின் அருகே உள்ள ராணி என்பவரின் ஆலோசனைப்படி, சங்கனூர் பகுதியில் உள்ள சர்ச் ஆப் பெதஸ்தா என்ற ஜப விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு பாதிரியார் ஐசக் வயிற்று வலியை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என கூறியதன் பேரில், அப்பெண் முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
சிறப்பு பிரார்த்தனை செய்ய ஜெப கூடத்திற்கு அப்பெண்ணை நேற்றிரவு அழைத்த பாதிரியார் ஐசக், அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிரியார் ஐசக் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பொதுமக்கள் மற்றும் இந்து முண்ணனியினர் கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாதிரியாரை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.