சவுதி அரேபியாவில் சிக்கிய கணவரை மீட்க போராடும் நெல்லை இளம்பெண்: கலெக்டரிடம் மனு
சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை: சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்க மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது கணவர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நியூ காலனியை சேர்ந்தவர் கெங்கா ராஜன். இவரது மனைவி முத்துசெல்வி. கெங்காராஜன் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் முத்துச்செல்வி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஆலங்குளத்தில் வசித்து வருகிறேன். பிளஸ்டூ வரை படித்துள்ளேன்.
எனது கணவர் கடந்த ஆண்டு காவல்கிணறை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் மூலம் சவுதிக்கு சென்றார். அங்கு அவர் டிரைவராக பணி புரிந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக நான் எனது கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது செல்போனை எடுக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் ரூ.8 லட்சம் கொடுத்தால் உனது கணவரை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்று கூறுகிறார். கடந்த ஒரு வாரமாக செல்போனை எடுக்கவில்லை. எனது கணவர் எதோ சிக்கலில் மாட்டியுள்ளதாக உணர்கிறேன்.
இதனால் மாவட்ட நிர்வாகம் எனது கணவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு வயதில் பெண் குழந்தை இருப்பதால் குடும்பம் நடத்த முடியாமல் திணறி வருகிறேன். எனது கணவரை மீட்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.