ஆற்றில் மிதந்த இளம்பெண் சடலம் : நாகர்கோவில் போலீஸார் தீவிர விசாரணை
நாகர்கோவிலில் ஆற்றில் கிடந்த இளம்பெண் மற்றும் குழந்தைகளின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் : இளம்பெண் குழந்தைகளுடன் ஆற்றில் கிடந்த சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே கருங்கலை அடுத்த மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் பேபி சாலினி என்ற சங்கீதா. இவரது கணவர் வள்ளவிளை ததேயூபுரத்தை சேர்ந்த விஜயதாசன். மீனவரான இவர் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு சஞ்சய், பியுபோபர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.
பேபி சாலினி- விஜயதாசன் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பேபி சாலினி தனது 2 மகன்களுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கணவர் விஜயதாசன், மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமரசம் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்து சென்றார்.
அதன்பின்பு பேபி சாலினியும், அவரது குழந்தைகளும் விஜயதாசனோடு காஞ்சாம்புரத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் பேபிசாலினியை அவரது தந்தை மார்ட்டின் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மார்ட்டின் மகளை தேடி வீட்டுக்கு சென்றார். அப்போது தான் பேபிசாலினியும், அவரது 2 குழந்தைகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.
மார்ட்டின் நித்திரவிளை போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கு கணபதியான்கடவு ஆற்றுப்பகுதியில் ஒரு இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் மார்ட்டினை தங்களுடன் அழைத்து கொண்டு கணபதியான்கடவுக்கு சென்றனர்.
அங்கு போனபின்புதான் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் மார்ட்டினின் மகளும், பேரன்களும் என தெரியவந்தது. போலீசார் பேபிசாலினியின் பிணத்தை மீட்டபோது அவரது முகம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்தது.
ஆனால் அவரது குழந்தைகள் உடலில் அப்படி எந்த தடயமும் இல்லை. அதே நேரம் பேபிசாலினியின் கால்கள் கட்டப்படவில்லை. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சங்கீதாவின் கழுத்து எலும்பு முறிந்துள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளதால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.