அலங்காநல்லூர் போராட்டத்தில் விபரீதம் - தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் அவரைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி விட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஊர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின்போது ஒரு வாலிபர் திடீரென தனது தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு விட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அவரது செயலால் மேலும் வேதனை அடைந்த போராட்டம் நடத்திய மக்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பலரின் உயிரைப் பறிக்கப் பார்க்கிறார்களா என்று ஆவேசமாக கோஷமிட்டனர்.