அதிகரிக்கும் “செல்ஃபி” விபரீதம்- பெரம்பலூரில் வாலிபர் அருவியில் தவறி விழுந்து பலி!
பெரம்பலூர்: பெரம்பலூரில் செல்ஃபி எடுக்க முயன்ற போது அருவியில் தவறி விழுந்த இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தில் வசிக்கும் மு.மணி என்பவர் மகன் சங்கர்கணேஷ். பொறியியல் பட்டதாரியான இவர், நவம்பர் 24ஆம் தேதி தனது நண்பர்கள் சிலருடன் லாடபுரம் வடக்கிலுள்ள ஆனைக்கட்டி ஆற்றில் குளிக்க செல்வதாககூறிச் சென்றுள்ளார்.
பச்சைமலையின் சரிவிலிருக்கும் இந்த ஆற்றின் பாதையில் பல்வேறு சிற்றருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் தொடர்மழையை அடுத்து நீர்பெருக்கு அதிகரித்திருந்ததால் அங்குள்ள அருவியில் குளித்த பிறகு சங்கர்கணேஷ் தனது செல்போனில் செல்ஃபி படங்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள மணலோடை அருகே வண்ணாத்திபாறை என்ற இடத்தின் அருகே செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக சங்கர்கணேஷின் உறவினர்கள் பெரம்பலூர் ஆட்சியர் தரேஸ் அஹமதுவை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில், சங்கர்கணேஷின் உடல் அவர் தவறி விழுந்த இடத்திலிருந்து 200 அடி தொலைவில் மீட்கப்பட்டது. இதுகுறித்து துறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.