நன்னிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த இளைஞர்கள் திடீர் கைது
நன்னிலம் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த இளைஞர்களை திடீரென காவல்துறை கைதுசெய்தது.
திருவாரூர் : நன்னிலம் கிராமத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக மக்களின் அனுமதி இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தார்.
ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறுகளை அமைத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சை கதிராமங்கலத்தில் பணிகள் நடந்தபோது மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான பணியை ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த வாரத்தில் தொடங்கியது. ஏற்கனவே இதன் பாதிப்புகளை அறிந்து இருந்த மக்கள் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது.
வேலைகளை நிறுத்திய மக்கள்
ஏற்கனவே நன்னிலத்தில் எண்ணெய் கிணறு அமைப்பதற்கான அடிப்படை வேலைகளை அந்நிறுவனம் செய்து இருந்தது. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதில் திருப்தி அடையாத கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அதனால் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதில் தீவிரமாக இருந்தனர்.
கேள்வி கேட்ட இளைஞர்கள்... திணறிய அதிகாரிகள்
அதிலும் இளைஞர்கள் சிலர் தொழில்நுட்ப ரீதியாக எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். மேலும், இந்தத் திட்டம் குறித்தான ஆவணங்களை எங்களிடம் காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாமல் திரும்பிச் சென்றனர்.
இளைஞர்கள் கைது
இந்த நிலையில், போராட்டத்தில் முன் நின்ற இளைஞர்கள் நான்கு பேரை காவல்துறை எந்தவித முன்பதிலும் இன்றி நேற்று கைது செய்துள்ளது. அவர்கள் இராவாஞ்சேரி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்த வாரம் நடக்க இருக்கும் ஹைட்ரோ கார்பன் விழிப்பு உணர்வுக்கூட்டத்தை நடக்க விடாமல் செய்யவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதோ என்கிற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்துள்ளது.
வழக்குகளின் விபரம்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அன்புச்செல்வன், ரவி, திலக், ஜானகிராமன் ஆகியோர் மீதுஅனுமதியின்றி நுழைதல், போராட்டம் நடத்துதல், அரசு அதுகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் அடக்குமுறையை இங்கும் மக்களின் மீது ஏவி உள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.
நன்னிலத்தில் மக்கள் போராட்டம் ?
இதுபோலவே, கதிராமங்கலத்தில் போராட்டம் நடக்கும்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் பேராசிரியர் ஜெயராமனை போலீஸார் கைது செய்தனர். இருந்தாலும் மக்கள் எழுச்சி பெற்றதால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதுபோல, இங்கும் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் நிலை எழுந்துள்ளது.