அதிகரிக்கும் செல்போன் டவர் போராட்டங்கள்.. அரசு மெளனம் கலைக்க வேண்டிய நேரம் இது
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் செல்போன் கோபுரங்களின் மீது ஏறி போராடி வருகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக இந்தப் போராட்டங்கள் நடைபெறவிருப்பது புதிய பிரச்சினையாக தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.
குடியால் சீரழியும் குடும்பங்களைச் சுட்டிக் காட்டி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்த வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை ஒன்றை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள், பரிதாபமாக உயிரிழந்தார்.
சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இளைஞர்கள் செல்போன் கோபுரங்களின் மீது ஏறி மதுவிலக்குக் கோரி போராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் கோவில் அருகே...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மணி (21) என்ற இளைஞர், சென்னை மடிப்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் உள்ள 28 மீட்டர் உயர செல்போன் கோபுரத்தில் ஏறிய இவர், அங்கிருந்தபடியே ‘தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவேண்டும். இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' மிரட்டல் விடுத்தார்.
குடிபோதையில் மிரட்டல்...
தகவல் அறிந்து விரைந்து வந்த பெரிய காஞ்சீபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரத்திற்குப் பின்னர் கீழே இறங்கி வந்தார் மணி. உடனடியாக அவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் போது மணி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தமாகா உண்ணாவிரதம்...
இதேபோல் தமாகா சார்பில் குமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பு பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டேவிட் (35) என்பவர் திடீரென அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறினார். அங்கிருந்தபடி, மதுக்கடைகளை அகற்றக் கோரி கோஷம் எழுப்பிய டேவிட், தற்கொலை மிரட்டலும் விடுத்தார். பின்னர் தீயணைப்பு படையினர் செல்போன் கோபுரத்தில் ஏறி டேவிட்டை மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
தடியடி... கைது
இதற்கிடையே டாஸ்மாக் கடையை இழுத்து மூட முயன்ற போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரையும் போலீசார் கைது செய்து திருவட்டார் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு...
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்போன் டவர்களில் ஏறி மதுவிலக்கு கோரி தற்கொலை மிரட்டல் விடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.