நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய சென்னை இளைஞர் கைது
கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஒரு மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 25-ம் தேதி பிறந்த நாள். அதனால் அவரது பிறந்தநாளை நண்பர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணினர். எனவே நண்பனுக்காக கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை சதீஷ் பொது இடத்தில் வைத்து அதாவது சாலையில் வைத்து, பட்டா கத்தியில் வெட்டியதாக கூறப்படுகிறது.
சதீஷ் பட்டா கத்தியால் கேக் வெட்டியது செல்போனில் நண்பர்கள் பதிவு செய்தனர். அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இது காட்சி வைரலாக போனது. இந்த காட்சியை கண்ட எம்ஜிஆர் நகர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் கேக் வெட்டப்பட்டுள்ளதாகவும், சதீஷின் இந்நடவடிக்கையை மிரட்டும் தொனியில் உள்ளதாகவும் போலீசார் கூறி சதீஷை தேடி விரைந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நண்பர்கள் வற்புறுத்தலால் பட்டாக்கத்தியால் கேக் வெடியதாக சதீஷ் தெரிவித்தார். ஆனால், இப்படி பட்டா கத்தியால் கேக் வெட்டினால் மற்ற இளைஞர்களிடம் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி போலீசார் சதீஷை கைது செய்தனர். இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி பினு பிறந்த நாளன்று கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.