காலேஜ்ல படிப்பவர் முதற்கொண்டு கந்து வட்டிகாரனா மாத்தி வைச்சுருக்காங்கப்பா.. நாமக்கலில் இளைஞர் கைது
கந்துவட்டி கேட்டு முதியவருக்கு கொலை மிரட்டல் கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி கேட்டு தொல்லை செய்த கல்லூரி மாணவர் ஒருவரை புகாரின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை மீண்டும் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை தாளாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கந்துவட்டி கொடுமை புகார்களின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவரை, கந்துவட்டி கேட்டு விவசாயியை தொல்லை செய்த வழக்கில் நாமக்கல் மாவட்ட போலீஸார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பெரியூரைச் சேர்ந்தவர் மாரப்பன். விவசாயியான இவருக்கு வயது 70. இவர் 2012ம் ஆண்டு நாமக்கல் சுவாமி நகரை சேர்ந்த மணி என்பவரிடம், ஐந்து லட்சம் ரூபாய் தொகையை வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
அந்த பணத்துக்கு ஈடாக இரண்டு ஏக்கர் நிலத்தை மணிக்கு பவர் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்கு மாரப்பன் வட்டி மட்டும் காட்டிவந்துள்ளார். இந்நிலையில், 30 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக கொடுத்தால் மட்டுமே நிலத்தை தர முடியும் என்று மாரப்பனிடம் தெரிவித்து உள்ளார் மணி.
இதற்கு நிலத்தின் உரிமையாளர் மாரப்பன் மறுப்பு தெரிவித்ததையடுத்து, ஏற்கனவே பவர் எழுதி கொடுக்கப்பட்ட நிலத்தை மணி தன்னுடைய உறவினர் பெயரில் கிரையம் செய்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட மாரப்பனுக்கும் தனது மகன் மூலம் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் படி, கந்துவட்டி கேட்டு துன்புறுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில், மணி மற்றும் அவரது மகன் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதில் மணி தலைமறைவான நிலையில், அவரது மகன் திலீப்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில், அவர் நாமக்கலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பதும், தனது தந்தையிடம் கடன் வாங்குவோரை மிரட்டுவதை வாடிக்கையாக செய்து வந்ததும் தெரியவந்து உள்ளது.