கட்டிக்கோ.. திருமணமான பெண்ணை வற்புறுத்திய இளைஞர்.. மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்
Recommended Video
சென்னை: சென்னையில் இன்னொரு பெண் வன்கொடுமைச் சம்பவம் நடந்துள்ளது. திருமணமான பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய தொழிலாளிக்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார் அந்த நபர்.
கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருபவர் ராதிகா. 38 வயதான இவர் திருமணமானவர். அங்கு பெயிண்ட் அடிக்க வந்த போரூர் லோகேஸ்வரன் (இவருக்கு வயது 28) என்பவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
ராதிகாவை மிகவும் பிடித்துப் போனதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார் லோகேஸ்வரன். ஆனால் அவரோ, எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.. எனவே முடியாது என்று கூறி விட்டார்.
தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் லோகேஸ்வரன். ஆனால் ராதிகா இறங்கி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து ராதிகா கழுத்தில் அறுத்து விட்டு தப்பி விட்டார்.
படுகாயமடைந்த ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து லோகேஸ்வரனைக் கைது செய்தனர்.