ஆரணி அருகே வட மாநில இளைஞருக்கு அடி-உதை.. போலீசார் விசாரணை
குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்கள் இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர்
ஆரணி: ஆரணி அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
ஆரணி அடுத்துள்ள கிராமம் காமக்கூர். இன்று காலை வடமாநில இளைஞர் ஒருவர் கிராமத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனை கவனித்த கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை அழைத்து யார், என்ன என்று விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் அவர் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவராக இருக்ககூடும் என்றும், கிராமத்தில் குழந்தை ஏதேனும் கடத்த வந்திருக்கலாம் என்றும் என்று சந்தேகித்த மக்கள், அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்க முயற்சித்தபோதும், பொதுமக்களில் ஒருசிலர் இளைஞரை சரமாரி தாக்கினர். இதனால் மிகவும் சிரமப்பட்டு பொதுமக்களிடமிருந்து இளைஞரை அழைத்து சென்ற போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.