எங்களுக்கு கச்சேரி வச்சே ஆகனும்.. சொல்லியும் கேட்காத ஊர்த் தலைவரை கும்மியெடுத்த "வ.வா.ச." இளைஞர்கள்!
மதுரை: மதுரை அருகே சிந்துப்பட்டி என்ற கிராமத்தில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவது போல எங்களுக்கு திருவிழாவில் ஆட்டம், பாட்டத்துடன் கச்சேரி வச்சே ஆகனும் என்று இளைஞர் குழு வலியுறுத்தியபோது, அதை ஊர்த் தலைவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த அவர்கள் அவரைப் போட்டு அடித்துத் துவைத்து விட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சிந்துபட்டி அருகே உள்ளது வகுரணி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கலையரசன். ஊர் நிர்வாகப் பொறுப்பை இவர் வசம் கொடுத்துள்ளனர். இத்தனைக்கும் இவர் இளைஞர்தான்.
கிராமத்தில் உள்ள கோவிலில் விழா நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஆட்டம், பாட்டு டான்ஸ் என எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. இதை வைத்தே ஆக வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கப்பெருமாள், மகேஸ்வரன், பூவரசன், இளவரசன், காசிமாயன் ஆகியோர் கலையரசனிடம் கூறியும் அவர் கேட்கவில்லையாம்.
அதெல்லாம் கச்சேரி கிடையாது என்று கூறி விட்டாராம். இதனால் கோபமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து கலையரசனை அடித்துத் துவைத்து விட்டனர். படுகாயமடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் அவரைத் தூக்கிக் கொண்டு போய் உசிலம்பட்டி அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
கச்சேரி வைக்காததால் கும்மியெடுத்த அந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரை" தற்போது போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.