உளுத்தம் பருப்பை நிறுத்தியதைக் கண்டித்து செல்போன் டவரில் ஏறி போராட்டம்.. இளைஞர் கைது
சென்னை அண்ணா சாலையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் நடத்தி வருகிறார்.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
ரேஷன் கடையில் சர்க்கரையின் விலை கூடியுள்ளது. அதேபோல் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் இளைஞர் ரவிச்சந்திரன் ஏறிக் கொண்டு போராட்டத்தில் குதித்தார். ஊழல், விலைவாசி உயர்வுக்கான 5-ஆம் ஆண்டாக டவர் போராட்டம் நடத்தி வருவதாகவும் தனது கையில் கிடந்த துண்டுப்பிரசுரங்களை கீழே வீசினார்.
கோரிக்கைகள் என்னென்ன
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். மாநில அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிட கூடாது.
ரூ.10-க்கு சர்க்கரை
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரேசன் கடைகளில் அனைவருக்கும்
இதுநாள் ரூ.13-க்கு சர்க்கரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ரூ.25 விலை உயர்த்தப்பட்டது. ரூ.10 விலையில் சர்க்கரை வழங்கவேண்டும். எழும்பூர் கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ், மாணவி அனிதா ஆகியோர் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது.
உடனடி வேலைவாய்ப்பு
விவசாயியின் தற்கொலையை கண்டித்து நீதி கிடைக்க வேண்டும். ஒன்றரை கோடி இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அரு போக்குவரத்து பணிமனைகள் அடகு வைத்து வாங்கிய பணத்தை அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை பின்னர் அழைப்பு
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். செல்போன் டவரின் உச்சிக்கு ஏறிச்சென்று தீயணைப்பு வீரர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக கீழே இறக்கினார்கள். பின்னர் போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.