"உதயசந்திரன் ஆர்மி"... சமூக வலைதளங்களில் வெடித்தது ஆதரவுக் குரல்! #stand_with_Udayachandran_IAS
தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக உள்ள உதயசந்திரனை இடமாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் ஆதரவுக் குரல் வெடித்துள்ளது.
சென்னை: பள்ளிக் கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் அதன் செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு ஆதரவாக உதயசந்திரன் ஆர்மி என்பதை உருவாக்கி அதில் ஆதரவு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்த 6 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உதயசந்திரன் ஐஏஎஸ் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக பதவியேற்றார். அதுநாள் முதல் பள்ளிக் கல்வி துறைக்கு நல்ல காலம் பிறந்தது.
ஆம்... பல்வேறு சீர்திருத்தங்களை அதிரடியாக மேற்கொண்டார். மேலபம் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கிரேடு முறை ஒழிக்கப்பட்டது. மொத்த மதிப்பெண்கள் 600-ஆக குறைக்கப்பட்டது. பிளஸ் 1- வகுப்பை இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக மாற்றியமைத்தது என எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தனிக்குழு
மேலும் கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள பாடத்திட்டங்களை மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் உள்ள கல்வியாளர்களைக் கொண்டு புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றனர். இவை நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
மாற்ற முயற்சி
இந்நிலையில் நேர்மையான அதிகாரியான உதயசந்திரன், கடந்த 2012-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த போது அதில் நடந்த ஆள்கள் நியமன விவகாரத்தில் இருந்த முறைகேடுகளையும் வெளிக் கொண்டு வந்தவர். தற்போது பள்ளிக் கல்வி செயலாளராக உள்ள உதயசந்திரனை மாற்ற தமிழக அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் அத்துறையில் ஊழல்களுக்கு உதயசந்திரன் துணை போகவில்லை என்று கூறப்படுகிறது.
ஆதரவு குரல்
படுபாதாளத்தில் இருந்த தமிழக பள்ளிக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களை கல்வியாளர்கள் முதற்கொண்டு அனைவரும் பாராட்டத் தொடங்கியுள்ளனர். இவரால் அத்துறை மேலும் வளர்ச்சி பெறும் என்றிருந்த நிலையில் அவரை இடமாற்றம் செய்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உதயசந்திரன் ஆர்மி
சமூகவலைதளங்களில் உதயசந்திரனை மாற்றக் கூடாது என்று கருத்துகளை பதிவிடுவதன் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் முற்பட்டு விட்டனர். அதன் எதிரொலியாக உதயசந்திரன் ஆர்மி என்பதை உருவாக்கி அதன் கீழ் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் டுவிட்டரிலும் ஒரு ஹேஷ்டேகை உருவாக்கி உதயசந்திரனுக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
|
மாற்றக் கூடாது
கல்வித் துறையில் மாற்றங்களை முன்னெடுத்துள்ள நம் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் அவர்களை மாற்றக் கூடாது.
#stand_with_Udayachandran_IAS
|
பேராயுதம்
#stand_with_udayachandran_ias : ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் எனும் பேராயுதம்!
நேர்மையான அதிகாரி
உதயசந்திரன் ஐஏஎஸ்ஸை பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு ஆவடி எம்எல்ஏவும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான மாபா பாண்டியராஜன், தனது டுவிட்டரில் அவர் திறமையான மற்றும் நேர்மையான அதிகாரி என்று பதிவிட்டுள்ளார்.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் உதயசந்திரன் மாற்றப்படுவாரா அல்லது பள்ளிக் கல்வித் துறையிலேயே நீடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.