கொடுமையைப் பாருங்க... இந்தியாவின் வெற்றிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட வேலூர் ரசிகர்
வேலூர்: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலரும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுத்தனர்.
இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. டோணி நின்று விளையாடி அணியின் ரன்கள் கணிசமாக அதிகரிக்க பெரிதும் உதவினார். அவர் அவுட்டான பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டது.
முன்னதாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இன்றைய ஆட்டத்தை டிவியில் பார்த்துள்ளார். ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்ததை பார்த்த அவர் கவலை அடைந்தார்.
உடனே அவர் இந்தியா வெற்றி பெற உதவுமாறு கடவுகள்களை வேண்டிக் கொண்டு கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்துக் கொண்டார். வலியால் துடித்த அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.