போதையில் வாகனம் ஓட்டி... போலீஸுக்கு பயந்து அடையாற்றில் குதித்த இளைஞர் பலி.. உடல் மீட்பு!
Recommended Video
சென்னை: சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இளைஞரின் பைக் சாவியை போலீஸார் பறித்ததால் அச்சமடைந்த இளைஞர் அடையாற்றில் குதித்ததால் உயிரிழந்தார்.
சென்னை அடையாறு பாலத்தின் அருகே போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவ்வழியாக பைக்கில் சென்றுள்ளார்.
அவரை போலீஸார் மடக்கினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இளைஞரது வாகன சாவியை பறித்தனர். இதனால் இளைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உளறல்
இதையடுத்து மேற்கொண்டு நடவடிக்கைக்கு பயந்த ராதாகிருஷ்ணன், சாவியை கொடுக்காவிட்டால் ஆற்றில் குதித்து விடுவேன் என்று போலீஸாரை அச்சுறுத்தியுள்ளார். குடித்து விட்டு இளைஞர் உளறுவதாக கருதிய போலீஸார் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சம்பவ இடம்
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் அந்த இளைஞர் ஆற்றில் குதித்தார். நேற்று காலை முதல் அவரை தேடும் பணிகள் நடைபெற்றன. தகவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பிரேத பரிசோதனை
இந்நிலையில் இரு தினங்களாக தேடப்பட்டு வந்த இளைஞரின் உடல் அடையாறு முகத்துவாரத்தில் கரை ஒதுங்கியிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸாரும் ,தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
தகவலறிந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராதாகிருஷ்ணன் சாவுக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.