காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகரில் போராட்டம்: இளைஞர்கள் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
இதனிடையே சென்னை மெரினாவுக்குள் புகுந்த மாணவர்கள் திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போராட்டம் நடத்தினர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து மெரினாவில் போலீஸார் பாதுகாப்பை வலுப்படுத்தினர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையினுள் நுழைந்தனர்.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி நுழைந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மெரினாவை கைப்பற்றுவோம் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.