திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள்!
ஈரோடு: திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி வர்ணபுரத்தைச் சேர்ந்தவர் விஜயன் (31). திருமணம் ஆனவர். இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடைக்கு வரும்போது அவருடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது மாணவிக்கு அவர் திருமண ஆசை காட்டி பழகி வந்தார்.
இதனையடுத்து கடந்த 01.12.2014 அன்று மாணவியிடம் விஜயன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனிடையே பள்ளி முடிந்து வந்த மாணவியை 2 நாட்களுக்கு பின்பு மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆனார் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.
இதுதொடர்பாக பவானி மகளிர் போலீசில் அந்த மாணவியின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து விஜயனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வங்கொடுமை செய்ததாக விஜயன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பிரிவின் கீழ் தலா ரூ.100 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.