அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து டி.எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் அரக்கோணம் கம்மவார் தெருவை சேர்ந்த கோகுல் (வயது 28) என்பவர் நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டி தப்பி சென்றதாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்தவர் யார் கொலை செய்தவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டபகலில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவத்தால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். இது குறித்து அரக்கோணம் டி.எஸ்.பி மனோகரன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.