ஜட்டிக்குள் 1 கிலோ தங்கம்.. வைத்து பாங்காக்கிலிருந்து வந்த பலே வாலிபர் கைது!
சென்னை: உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 1 கிலோ தங்கத்தை பாங்காக்கில் இருந்து கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாலையில் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டைச் சேர்ந்த கடத்தல் மன்னன் அவந்தி கலடா(25)விடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது சூட்கேஸில் இருந்த ஆவணங்களை அவரால் குனிந்து எடுத்துக்காட்ட முடியவில்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடையை கழட்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆடைகளை கழற்றியபோது அவர் தனது உள்ளாடைக்குள் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இது தவிர இன்று காலை கொழும்பில் இருந்து சென்னை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2 வாலிபர்கள் தங்களின் பைகளை போட்டுவிட்டு ஓடினர். அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் ஏராளமான தங்க காசுகள் இருந்தன. இதையடுத்து அந்த வாலிபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.