முன்னாள் காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அத்திரமரப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன். அவர் முத்தையாபுரத்தில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். அவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அந்த பெண்ணுக்கு தூத்துக்குடியை சேர்ந்த வேறு ஒருவருடன் நிச்சியதார்த்தம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட்டார். இதற்காக அவர் தனது காதலியின் புகைப்படத்தை வேறு ஒரு பெண்ணின் ஆபாச படத்தின் மூலம் திருத்தி அந்த ஆபாச படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் வீட்டார் பிரவீனை தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரவீன் அந்த பெண் வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர்கள் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி பிரவீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.