காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்... மிரட்டிய சென்னை வாலிபர் கைது
சென்னை: காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக சென்னையில் பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி,விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.தினசரி அந்த மாணவி பள்ளிக்கு வரும் போதும்,போகும் போதும் பின் தொடர்ந்து வந்த செல்வக்குமார் என்ற 23 வயது வாலிபர் தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியை வழிமறித்த செல்வக்குமார்,வரும் 11ம் தேதிக்குள் தன்னை காதலிக்காவிட்டால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என மிரட்டியுள்ளார்.
இதனை கேட்டு பயந்து போன அந்த மாணவி,தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் செல்வக்குமார் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வரும் அவர்,சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்த செல்வகுமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சுவாதி கொலை நடந்து இன்னும் சில வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில்,பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.