300 அடி உயர செல்போன் டவரில் தேசியக்கொடி ஏற்றிய வாலிபர்... எச்சரித்த போலீசார்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில் 300 அடி உயர செல்போன் டவரில் ஏறி என்ஜீனியரிங் பட்டதாரி தேசிய கொடியேற்றினார். இது தெரியாமல் அவர் தற்கொலைக்கு முயல்வதாக போலீசாருக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடுத்த உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 300 அடி உயர செல்போன் டவர் உள்ளது. நேற்று காலையில் வாலிபர் ஒருவர் இங்கு வந்தார். மடமடவென செல்போன் டவரில் ஏறினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள், ‘தற்கொலைதான் செய்து கொள்ளப் போகிறார்' என நினைத்து, கானத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அந்த வாலிபர் செல்போன் டவரின் உச்சியில் தேசிய கொடியை கட்டி விட்டு, டவரின் மேலே நின்று கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கானத்தூர் போலீசார் அந்த வாலிபரை கீழே இறங்கும் படி கூறினர். இதனையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார்.
விசாரணையில், அந்த வாலிபர் அடையாறு இந்திரா நகரை சேர்ந்த குமரன்(23)என்றும், பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர் என்றும், சுதந்திர தினத்தை ஒட்டி மிகவும் உயரமான இடத்தில் தேசிய கொடியை பறக்கவிடவேண்டும் என்று ஆசைப்பட்டு உயரமான டவரில் தேசிய கொடியை ஏற்றியதும் தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அந்த வாலிபரின் கையைபிடித்து பாராட்டு தெரிவித்தனர். பின்னர் வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.