குடிகாரர்களிடம் கவனமாக டீல் பண்ண வேண்டும்.. போலீஸுக்கு வந்த இக்கட்டான நிலையை பாருங்க!
போலீசை மிரட்டிய இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்தார்.
Recommended Video
சென்னை: குடிகாரர்களிடம் ரொம்ப கவனமாக டீல் செய்ய வேண்டும் என்பதை சென்னை காவல்துறைக்கு ஒரு குடிகாரர் "டெமோ" செய்து காட்டி அதிர வைத்துள்ளார்.
அடையாறு கூவம் அருகே நேற்றிரவு வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் என்பவர் பைக்கில் அந்த பக்கம் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர்.
சாவியை எடுத்த போலீஸ்
பின்னர் அவரிடம், விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். கூடவே மது வாடையும் வந்திருக்கிறது. அதனையும் சோதனை செய்து போலீசார் உறுதிப்படுத்தி கொண்டனர். தண்ணி அடித்துவிட்டு பைக் ஓட்டிவந்ததால், பைக்கில் இருந்த சாவியை போலீசார் எடுத்து கொண்டனர். இதனால் ஆத்திரமுற்ற ராதாகிருஷ்ணன் சாவியை தருமாறு தகராறு செய்தார்.
கூவத்தில் விழுந்தார்
போதையில் கன்னாபின்னாவென்று போலீசாரை பேசினார். அப்போதும் சாவி தரப்படவில்லை. சாவியை கொடுக்காவிட்டால் கூவத்தில் விழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். அப்போதும் சாவி தரப்படவில்லை. அப்போது போலீஸார் எதிர்பார்க்காதபோது, ராதாகிருஷ்ணன் கூவம் ஆற்றில் திடீரென்று ஓடிப்போய் விழுந்துவிட்டார்.
தீயணைப்பு வீரர்கள்
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத போலீசார் பதறி போய்விட்டனர். திரும்ப எழுந்து வருகிறாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர். ஆனால் ராதாகிருஷ்ணன் வரவேயில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
ராதாகிருஷ்ணன் வருவாரா?
விடிய விடிய நடந்தும் ராதாகிருஷ்ணன் வரவே இல்லை. இதில் உறவினர்களும் அப்பகுதிக்கு வந்துவிட்டதால் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராதாகிருஷ்ணன் கூவத்திலிருந்து மீண்டு வருவாரா?