மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாளை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்த வாலிபர்!
பாளை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பேருந்திலிருந்து வாலிபர் ஒருவர் திடீரென குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாளை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் செல்வம் 40. கூலி தொழிலாளியாக பணியாற்றும் இவர் சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வருகிறார். ஆனால் செல்வம் தினமும் மது அருந்துபவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று செல்வம் மது போதையில் இருந்தபோது, நெல்லை சந்திப்பில் இருந்து கோவை குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அருகில் இருந்தவருடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் பேசியபடியே வந்துள்ளார்.
பேருந்து டக்கரம்மாள்புரம் அருகே சென்றுபோது திடீரென செல்வம் 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமையுங்கள்’ என்று உரக்க கத்தியபடியே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வம் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வத்துக்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கும், முகத்தில் ஏற்பட்ட காயத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெருமாள் புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.