இளைஞரைக் வெட்டிக் கொலை செய்து சடலத்தை பைக்கில் கடத்திய வாலிபர்கள்.. வேலூரில் பரபரப்பு
வேலூரில் இளைஞரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை பைக்கில் கடத்திச் சென்ற மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்: வேலூரில் இளைஞரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை பைக்கில் கடத்திச் சென்ற மர்மநபர்கள் போலீசாரைக் கண்டதும் சடலத்தை வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தங்கவேலு. இவர் பணிமுடித்துவிட்டு திரும்பி வரும் போது இரண்டு பைக்குகளில் 5 பேர் வேகமாக சென்றுள்ளனர்.
அவர்கள் போதையில் இருக்கலாம் என சந்தேகமடைந்த தங்கவேலு, அவர்களை பிடிக்க பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் சென்ற ஒரு நபரை மட்டும் கீழே தள்ளி விட்டு மற்றவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.
தங்கவேல் கீழே தள்ளியவரை பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார். மேலும் தலை, கை, கால், வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கவேல் அளித்த தகவலின் படி பைக்கில் தப்பிச் சென்றவர்களை வேலூர் தெற்கு போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் பைக்கில் வந்தவர்கள் போலீசார் மீது மோதியுள்ளனர்.
பின்னர் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அனைவரும் தப்பிச் சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற பைக் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவற்றில் பொருத்தப்பட்டிருப்பவை போலி பதிவெண் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொல்லப்பட்டவர் யார் எதற்காக கொல்லப்பட்டார் உள்ளிட்ட விபரங்களை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.