அக்காவை அடித்துத் துன்புறுத்திய மாமாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற மச்சான்!
கிருஷ்ணகிரி: தனது சகோதரியை குடித்து விட்டு வந்து தினசரி அடித்து உதைத்து வந்த அக்காள் வீட்டுக்காரர் மீது கோபமடைந்த அவரது மைத்துனர் சரமாரியாக உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றார்.
தனது அக்காவின் உதவியுடன் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார் அந்த வாலிபர். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். 37 வயதான இவரது மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குடிக்கும் பழக்கம் கொண்டவர் பூங்காவனம். தினசரி குடித்து விட்டு வருவது, வந்து மனைவியைப் போட்டு அடிப்பது என அட்டகாசம் செய்து வந்தார். இதனால் மீனாட்சி மன வேதனையுடன் வாழ்ந்து வந்தார். தனது சித்திரவதை குறித்து தம்பி வெங்காடசலத்திடம் சொல்லிப் புலம்புவாராம்.
ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் போகவே கணவரை விட்டுப் பிரிந்து பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அப்படியும் விடாமல் அடிக்கடி மாமனார் வீட்டுக்கும் வந்து மனைவியிடம் சண்டை போடுவாராம் பூங்காவனம்.
சம்பவத்தன்றும் அவர் மாமனார் வீட்டுக்கு குடிபோதையில் வந்த அவர் மீனாட்சியிடம் தகராறு செய்தார். பின்னர் அடித்துள்ளார். அதன் பிறகு தனது வீட்டுக்குப் போய் விட்டார்.
இரவில் வீடு திரும்பிய வெங்கடாச்சலம், தனது அக்காவை, மாமா பூங்காவனம் வந்து அடித்து விட்டுப் போனதை அறிந்து கடும் கோபமடைந்தார். அக்காவைக் கூட்டிக் கொண்டு பூங்காவனம் வீட்டுக்குப் போனார். அங்கு போதையில் படுத்துக் கிடந்தார் பூங்காவனம்.
கடும் கோபத்தில் இருந்த வெங்கடாச்சலம், உருட்டக்கட்டையை எடுத்து சரமாரியாக அடித்தார். அப்போது பூங்காவனம் தப்பி விடாமல் மனைவி மீனாட்சி அவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். பின்னர் அரிவாளை எடுத்து மாமாவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார் வெங்கடாச்சலம். இதில் பூங்காவனம் கடும் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
அக்கம் பக்கத்தினர் பூங்காவனத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் பூங்காவனம். போலீஸார் வழக்குப் பதவு செய்து வெங்கடாச்சலத்தைக் கைது செய்தனர். மீனாட்சி தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடி வருகின்றனர்.