ரூ. 21 லட்சம் வெளிநாட்டுப் பணத்துடன் குத்துக்கல் வலசையில் சிக்கிய வாலிபர்!
தென்காசி: தமிழக கேரளா எல்லைப்பகுதியான தென்காசி அருகேயுள்ள குத்துக்கல் வலசையில் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்துடன் சந்தேகத்திற்கிடமான நிலையில் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலையில் நின்றுகொண்டிருந்த நபரை அங்கு தற்காலிக சோதனை சாவடியில் உள்ள உதவி ஆய்வாளர் துரை மற்றும் போலீசார் அழைத்து சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் 21 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.
அவரை விசாரித்த போது அவர் கடையநல்லூரை சேர்ந்த உசேன் அகம்மது எனவும் கேரள மாநிலத்தில் இருந்து இந்த பணத்தை தங்கள் நிறுவனத்திற்காக கொண்டுவருவதாகவும் கேரளாவில் இருந்து வரும் பேருந்தில் இருந்து இறங்கி நின்றதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் சந்தேகம் விலகாத தென்காசி காவல்துறையினர் பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த அளவு வெளிநாட்டுப் பணத்தை அவர் ஏன் கடையநல்லூருக்குக் கொண்டு சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.