தர்மபுரி: மாணவிகளை பலாத்காரம் செய்ய முயன்ற காமுகன்... தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மர்மம்
தர்மபுரி: பள்ளி, கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று பஞ்சாயத்தாரிடம் தண்டனை பெற்று ஊரை விட்டு வெளியேறி இளைஞன், ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த வாலிபரின் பெயர் அர்ஜூனன்(22) என்பதாகும். இவர் தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்துள்ள, கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்தவர். கட்டிட மேஸ்திரி வேலை செய்யும் அர்ச்சுனன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதேபகுதியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதேபோல், சில நாளுக்கு முன்பாக வீட்டில் படுத்திருந்த கல்லூரி மாணவி ஒருவரையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர், ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கூறி பஞ்சாயத்து வைத்துள்ளனர். அப்போது, இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என ஊர் முக்கிய பிரமுகர்களிடம் அர்ஜுனன் வாக்குறுதி அளித்துள்ளார். இதயடுத்து, அர்ச்சுனனுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்து பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். மேலும், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஊரில் நுழையவும் தடை விதித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு அர்ஜூனன் சனிக்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அர்ச்சுனன் மாமன் முருகன் என்பவர் அபாராத தொகை, 25 ஆயிரம் ரூபாயை ஊர் பிரமுகர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பொம்மிடி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளப் பகுதியில், மர்மமான முறையில் அர்ஜூனன் இறந்து கிடந்தார். தகவலறிந்த, சேலம் ரயில்வே போலீஸார், அர்ச்சுனன் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.