ஆண்கள் சினிமா மோகத்தில்.. பெண்கள் சீரியல் மோகத்தில்: அய்யகோ! ராமதாஸ் வேதனை!
சென்னை: சினிமா மோகத்தில் இளைஞர்களும், சீரியல் மோகத்தால் பெண்களும் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனைப்பட்டு பேசியுள்ளார்.
படித்து முடித்து வேலைக்கு போன பிறகு, காதல் தானாக மலர்ந்தால் மலர்ந்து விட்டு போகட்டும்' என்று, இதுவரை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ராமதாஸ் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
வழக்கமாக திருமண நிகழ்ச்சிகளுக்கு போனால் காதல் திருமணங்களுக்கு எதிராகவே பேசி பேசி அலுத்துப்போனதாலோ என்னவோ இம்முறை சினிமாவையும் சீரியலையும் ஒருபிடி பிடித்துவிட்டார் ராமதாஸ்
செய்யாறில், விஸ்டம் கல்வி குழும பொதுச் செயலாளர் தவமணி - சரஸ்வதி தம்பதியரின் மகன் டி.அருணகிரி எஸ்.கல்பனா ஆகிய மணமக்களின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்திய டாக்டர்.ராமதாஸ் மது, காதல், என்று வழக்கம்போலவே பேச்சை தொடங்கினார். அவரது பேச்சை மேற்கொண்டு படியுங்களேன்.
இலவசங்களும் மதுவும்
தமிழகத்தில் உள்ள குடிப்பழக்கம் சமுதாயத்தை, குடும்பத்தை சீரழித்து வருகிறது. மது இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும், இலவசங்கள் இருக்கும் வரை மது இருந்துக் கொண்டே இருக்கும்.
மாணவர்களுக்கும் மதுப்பழக்கம்
தற்போது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் குறைந்து வருவதை நேரில் காணமுடிகிறது. 13 வயதில் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் அவல நிலை தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணமாக இருப்பது பள்ளிகளில் நன்னறிவு அளிக்ககூடிய முறையான நீதி போதனை வகுப்புகள், உடற்பயிற்சிகள் இல்லை.
சினிமாவும் சீரியலும்
சினிமா மோகத்தில் இளைஞர்களும், மெகா சீரியல் மோகத்தில் பெண்களும் மூழ்கி சீரழிந்து வருகின்றனர். சமுதாயம் வளர்ச்சி பாதையில் செல்லவில்லை. சமுதாயத்தில் மாற்றம் வேண்டும். பெண்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள செய்திகளை பார்க்க வேண்டும்.
21 வயதுக்கு மேல் காதலிக்கலாம்
இளைஞர்களுக்கு, 21 வயதுக்குள் காதல், கத்தரிக்காய் என்பதெல்லாம் வேண்டாம். அது வாழ்க்கைக்கு உதவாது. படித்து வேலைக்கு போன பிறகு, அது தானாக மலர்ந்தால், மலர்ந்து விட்டு போகட்டும்.ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டால், பெற்றவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணி பாருங்கள்.
காதல் திருமணங்கள்
காதல் திருமணம் என்றால் கூட, பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தால் தான், அது சிறப்பான மண வாழ்க்கையைத் தரும்.
அறியாப் பருவம் கொண்ட, 18 வயதுப் பெண்களை, அவர்களுடைய பெற்றோர் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். இளம் வயது ஆண்களும், பெண்களும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்; காதலை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். கல்வியே உங்களுக்கு, எல்லா சுகத்தையும் தேடித் தரும் என்று முத்தாய்ப்பாக முடித்தார் ராமதாஸ்.
அது சரி அய்யா!
ராமதாஸ் ஐயா சொல்வதென்னவோ சரிதான். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் நீலாம்பரி என்ற சீரியலும், நீதானே என்ற பொன் வசந்தம் என்ற சீரியலும் யாருக்காக ஒளிபரப்புகின்றனர் என்பதை கூறுவாரா? படிப்பது ராமாயணம், இடிப்பது என்னவோ பெருமாள் கோவிலாகத்தானே இருக்கிறது ஐயாவின் பேச்சு.