"அம்மா" ஜெர்சி ரெடி... மோடி ஜெர்சியும் வருதாம்... ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளையர்கள்!
மதுரை: தூங்கா நகரமான மதுரையில் இப்போது மொத்தம் 3 இடங்கள்தான் படா சுறுசுறுப்பாக இருந்து வருகின்றன. அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய பகுதிகள்தான் அவை.
ஜல்லிக்கட்டுக்கு நாள் குறித்து விட்டதால் அத்தனை ஏற்பாடுகளும் படு ஜரூராக நடந்து வருகின்றன. கேலரி அமைப்பது, வாடி வாசல்களுக்கு வெள்ளை அடித்து வர்ணம் பூசுவது என ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களும், ஊர் மக்களும் பயங்கர பிசியாக உள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கான இதர ஏற்பாடுகளும் மறுபக்கம் களை கட்டியுள்ளன.
"அம்மா" படம் போட்ட ஜெர்சி
என்னதான் பொன் ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வாங்கிக் கொடுக்க முயற்சிகள் எடுத்தாலும் முதல்வர் ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர்கள்தான் ஊர்பக்கம் அதிகம் உள்ளனர். ஜெயலலிதா படம் போட்ட ஜெர்சிகள் ரெடியாகி வருகின்றனவாம்.
மோடி ஜெர்சியும் வருதாம்
மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடி படம் போட்ட ஜெர்சியையும் பாஜகவினர் தயாரித்து இலவசமாக காளையர்களுக்கு கொடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.
தயாராகும் காளைகள்
ஜல்லிக்கட்டுக் காளைகளின் உடல் நலனை சோதனை செய்வது, அதற்கு பயிற்சி தருவது என்றும் இந்தப் பகுதி மக்கள் பிசியாக உள்ளனர். தினசரி காளைகளைக் குளிக்க வைத்து அவற்றின் நலனையும் பேணி வருகின்றனராம்.
கேலரிகள் அமைப்பு
மூ்ன்று ஊர்களிலும் கேலரிகள் அமைப்பும் விறுவிறுப்பாகியுள்ளது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் மிகுந்த பாதுகாப்புடன் கேலரிகள் அமைக்கப்படுகின்றன. பார்வையாளர்களையும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தையும் பிரிக்கும் வகையில் நீண்ட தடுப்புகளும் போடப்பட்டு வருகின்றன.
வாடி வாசல் அலங்காரம்
வாடி வாசல்கள் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசி புதுப் பெண் போல ஜொலிக்கின்றன. ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதால் ஊர் மக்களும் பெரும் ஆர்வத்துடன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
சந்தோஷ திக்குமுக்காடல்
மொத்தத்தில் ஜல்லக்கிட்டை ஒரு போட்டியாக நினைக்காமல் தங்களது வாழ்வின் ஒரு அங்கமாக கருதும் கிராமத்து மக்கள் பெரும் உவகையுடன் இந்த பொங்கலை ஜமாய்க்க உணர்ச்சிப் பெருக்குடன் காத்துள்ளனர்.