மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு... மதுரை ஐஓசி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை: விவசாயத்துக்கு பாதிப்பை அளிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தை (ஐஓசி) முற்றுகையிட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டங்கள் விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக மதுரையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் மேற்கண்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி மதுரை தல்லாங்குளத்தில் உள்ள ஐஓசி அலுவலகத்தின் வாயிலில் இளைஞர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாரின் எதிர்ப்பையும் மீறி இளைஞர்கள் அலுவலகத்தினுள் சென்று முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.