மெரினாவில் தடையை விலக்குங்கள்... நாங்கள் சாதித்து காட்டுகிறோம்... இளைஞர்கள் ஆவேசம்!
காவிரி உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : காவிரி உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மெரினாவில் போராட அரசு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டுக் கொண்டுவருவதற்காகப் போராட இளைஞர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல காவிரி நீரை பங்கிட்டு கொடுத்த கையோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாகச் சொன்னது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதன் பலன் இன்னும் தமிழக மக்களுக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதே போன்று தமிழக அரசும் மத்திய அரசு மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி உரிமைக்காக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளுடன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காவிரி உரிமையை மீட்க அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்த வேண்டாம். மெரினாவில் போராடுவதற்கு போடப்பட்டுள்ள தடையை மட்டும் விலக்கினாலே போதும், நம்முடைய உரிமைக்காகவும், விவசாயத்தை காக்கவும் போராட இளைஞர்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.