ஜல்லிக்கட்டு.. புதுவையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.. இளைஞர்கள், பொதுமக்கள் கைகோர்ப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி புதுவையில் ஆளுநர் மாளிகையை இளைஞர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி: பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி புதுச்சேரியில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், புதுவையிலும் அதன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
இன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். பின்னர், போராட்டக்காரர்கள் மனிதச் சங்கிலியை முடித்துக் கொண்டு பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்றனர். இதனையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். மேலும், போலீசாரின் தடையை மீறி ஆளுநர் மாளிகைக்குள் நுழைய இளைஞர்கள் முயன்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஏராளமான இளைஞர்கள திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் மாநாட்டில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு, தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும், ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.