புதுவையில் ராணுவ தேர்வில் தோல்வியடைந்த இளைஞர்கள்... காலையிலேயே சரக்குக் கடைகளில் தஞ்சம்!
புதுவையில் நடைபெற்ற ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் தோல்வியடைந்த இளைஞர்கள் சரக்குக் கடைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி : புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்புக்காக நடைபெற்ற முகாமில் தோல்வியடைந்த இளைஞர்கள் காலையிலேயே மதுபானங்களை வாங்கி சாலைகளில் அமர்ந்து குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் சாலையோரங்களில் அதிக அளவில் திரண்டு மதுபானங்களை வாங்கி குடித்து வருவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 3ம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற ராணுவத்திற்கு ஆள்சேர்ப்புக்கான தேர்வில் உடல்தகுதி தேர்வு, ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
ராணுவத்தில் சேர வந்தவர்களில் தோல்வியடைந்த இளைஞர்கள் ஊர் திரும்புவதற்கு முன்னர் புதுச்சேரி மாநில சரக்குகளை ருசிப்பதற்காக காலை முதலே பார்களை நோக்கி படையெடுத்துள்ளனர். காலை 8. 30 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் இருந்த பார் ஒன்றிற்குள் திபுதிபுவென திரண்ட இளைஞர்கள், சரக்குகளை வாங்கிப் பருகினர்.
காலையிலேயே பாரில் திரண்ட இளைஞர்கள்
இளைஞர்கள் அதிக அளவில் இருந்ததால் பாருக்குள் இடம் இல்லை, இதனையடுத்து பார்களுக்கு அருகில் இருந்த பெட்டிக்கடைகளில் சைட் டிஷ்களை வாங்கி குடித்து வருகின்றனர். காலையிலேயே இளைஞர்கள் கடற்கரை சாலையில் அதிக அளவில் திரண்டு சாலையில் வைத்தே மது அருந்தி வருவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர்கள் விரட்டியடிப்பு
இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதிக்கு வந்து இளைஞர்களை விரட்டியடித்தனர், எனினும் போலீசார் சென்ற பின்னர் மீண்டும் இளைஞர்கள் பாரைச் சூழ்ந்து கொண்டு பீர் பாட்டில்களை வாங்கி குடித்து வருகின்றனர்.
தேர்வில் தோல்வியடைந்ததால்
வேலூர் மாவட்டத்தில் காலையிலேயே பார்கள் திறக்கப்படாது, ஆனால் இங்கு காலையிலேயே பார்கள் திறந்திருப்பதால் மதுபானங்களை வாங்கி குடித்து வருவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். ராணுவத்திற்கு சேர வந்த இளைஞர்கள் தோல்வியடைந்ததையடுத்து மதுபானக்கடைகளை நோக்கி படையெடுத்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார் ஊழியர்களுடன் வாக்குவாதம்
காலையிலேயே பார்களுக்கு வந்ததோடு இல்லாமல் ஏன் சைட்டிஷ் இல்லை என்றும் இளைஞர்கள் பார் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பாரில் இருப்பவர்கள் அருகில் இருந்த கடைகளுக்குச் சென்று கிடைத்தவற்றை வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.