தலித் இளைஞர் கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்து கொண்டார்... விடுதலையான யுவராஜ் பேட்டி
வேலூர்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை பேரவை என்ற ஜாதி அமைப்பின் தலைவரான யுவராஜ் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோகுல்ராஜன் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் அவர் கொல்லப்படவில்லை என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சம்பவ நாளில் கோகுல்ராஜும் அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் கோவிலில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் கோகுல் ராஜை மட்டும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கோவிலின் சிசி டிவியில் பதிவாகி இருந்தது.
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட தகவலை அந்த பெண், தம் நண்பர்களிடத்தில் கூறியதையடுத்து கோகுல்ராஜை அவர்கள் தேடினர். இந்நிலையில் தான் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இந்த பிரச்னையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக கூறி இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி அவரது சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
தீரன் சின்னமலை பேரவை என்ற பெயரில் ஜாதி அமைப்பை நடத்தி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது அமைப்பினர்தான் கோகுல்ராஜைக் கொலை செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த வழக்கில் போலீஸார் 14 பேரைக் கைது செய்தனர். யுவராஜ் பெரும் பரபரப்புக்கு மத்தியில் பேரணியாக வந்து போலீஸில் சரணடைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் கைதான பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
இந்த நிலையில் யுவராஜை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. யுவராஜ் 100 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டதால் ஜாமீனில் விடுவிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. வழத்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை நெல்லையில் தங்கி தினமும் காலையும், மாலையும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று வேலூர் சிறையிலிருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க பெரும் திரளான ஆதரவாளர்கள் குவிந்திருந்ததால் வேலூர் சிறைக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
விடுதலையான பின்னர் யுவராஜ் சிறை வளாகத்திற்குள் இருந்தபடி செய்தியாளர்களிடம் யுவராஜ் பேசுகையில், இனி வரும் காலங்களில் ஆட்சி நிர்வாகம், அரசு நிர்வாகம் முறையாக இருக்க வேண்டும். யாரும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு பணியாற்றக் கூடாது. அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் வருகிறார்கள். அவர்கள் நேர்மையாக பணியாற்றுவதற்கான சமுதாயச் சூழலை ஏற்படுத்த வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது. அனைத்து மதத்துக்கும் பொதுவான கோயில் நீதிமன்றம். அனைவருக்கும் பொதுவான கடவுள் நீதிபதி. எனக்கு அவர்கள் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உண்மைகளையும் நீதிமன்றத்தின் மூலமாக வெளிக் கொண்டு வருவேன். அப்போது தற்கொலைதான் என்று நிரூபிக்கப்படும்.
அதேபோல, டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணமும் நிர்ப்பந்த கொலைதான். இது திட்டமிட்ட நிர்ப்பந்தக் கொலை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்பவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன். அவர்கள் இரண்டு பேர் நீதிமன்றத்தின் மூலம் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழகத்திலேயே அரசுத் துறையில் உச்சகட்ட மன அழுத்தத்துடன் வேலை பார்ப்பவர்கள் காவல்துறையினர்தான். மிகவும் மோசமான சூழலில் பணியாற்றுவது அவர்கள்தான் என்றார் யுவராஜ்.