சரணடைவதற்கு முன் யுவராஜ் அளித்த "சிறப்பு"ப் பேட்டி... வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ!
சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ், இன்று சரணடைவதற்கு முன்னதாக அளித்த சிறப்புப் பேட்டி வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தலித் இளைஞரான கோகுல்ராஜ், வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைவழக்கில் முக்கியக் குற்றவாளியான மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த மாதம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தன்னிடமிருந்த ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் யுவராஜ்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு சிறப்புப் பேட்டி அளித்தபடியும், வாட்ஸ் அப் வாயிலாக ஆடியோ அனுப்பியும் வந்தார் யுவராஜ். கடைசியாக அவர் அனுப்பிய ஆடியோவில் இன்று சரணடையப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நாமக்கல்லில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு யுவராஜ் சரணடைந்தார். டூவிலரில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த யுவராஜைக் காண ஏராளமானோர் அங்கு குவிந்திருந்ததால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் சிறப்புப்பேட்டி அளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "இந்த வழக்கை சட்டப்படி பொய் வழக்கு என நிரூபிப்பேன். இந்த வழக்கில் தவறு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பேன். விஷ்ணுபிரியாவின் மரணத்திற்குக் காரணமான அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தான் சரணடைந்தாலும் மேலும் சில ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் தயாராக இருப்பதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் யுவராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.