நீங்க ஒரு மடங்கு யோசிச்சீங்கன்னா.. தமிழக போலீஸாருக்கு யுவராஜ் பகிரங்க சவால்...!
சென்னை: தமிழக காவல்துறைக்கு தொடர்ந்து பகிரங்கமாக சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் யுவராஜ். முன்பு தடபுடலாக தனது ஆதரவாளர்கள் புடை சூழ வந்து போலீஸில் சரணடைந்தார்.
இப்போது ஒரு ஆடியோவை வாட்ஸ் ஆப்பில் போட்டுள்ளார். அது தமிழக சிபிசிஐடி போலீஸாரை கடுமையாக எச்சரிப்பதாக உள்ளது.
இந்த வாட்ஸ் ஆப் ஆடியோவில் உள்ள யுவராஜ் பேச்சிலிருந்து:
முழுக்க முழுக்க தவறானது
சிபிசிஐடியை பொறுத்தவரை விசாரணை அதிகாரிகள், தங்களது விசாரணைகள் முழுக்க முழுக்க தவறானது. சட்டத்திற்கு விரோதமானது என மிக தெளிவாக தெரிந்தேதான் செயல்பட்டு வருகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் எங்கள் மீது தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சொல்லியுள்ளனர்.
திட்டமிட்டு மறைக்கிறார்கள்
சிபிசிஐடி காவல்துறை நாமக்கல் மாவட்டம், திருச்செங்ககோடு நகர காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை திட்டமிட்டுத்தான் மறைத்திருக்கிறார்கள் என மிக தெளிவாக இருக்கிறது. இது விசாரணை அதிகாரிகளுக்கு தெரியும். விசாரணை அதிகாரிகளுக்கு நான் ஒன்றை சொல்லுகிறேன். இதனை நீங்கள் திட்டமிட்டு செய்யவில்லை. நிர்பந்தத்தின் பேரில் செய்கிறிர்கள். ஆனால் ஒரு எல்லை உண்டு.
நான் குற்றவாளி இல்லை
நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரையும், ராசிபுரம் டிஎஸ்பி ராஜூவை மட்டும்தான் நான் சொல்லி வருகிறேன். எங்கள் மீதான வழக்கில் ஒரு எல்லை வரைதான் நாங்கள் விட்டுக்கொடுக்க முடியும். ஒரு எல்லைக்கு மேல் நீங்கள் செயல்பட்டால் நான் விட்டுத்தர முடியாது. நீங்களும் குற்றவாளிகளாக்கப்படுவீர்கள். நான் குற்றவாளி இல்லை.
உங்க நிலைமை என்ன ஆகும்
இந்த வழக்கு தவறாக நடத்தப்பட்டிருக்கிறது. இதனை மட்டும் விசாரணை நீதிமன்றத்தில் சொல்வதா. இல்லை குற்றவாளிகளை மறைக்க சிபிசிஐடி அதிகாரிகள் செயல்பட்டார்கள் என்று சேர்த்தால் சிக்கலாகும். அதற்கான ஆதாரம் நீங்க போட்ட சார்ஜ் சீட்டில் இருக்கிறது. டிரையல் கோர்ட்டில் நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. அப்ப உங்க நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள்.
எல்லை தாண்டி போகிறீர்கள்
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களை மிரட்டுவதற்காக சொல்லவில்லை. ஒரு எல்லையை தாண்டி போய்க்கிட்டு இருக்கீங்க. நான் அமைதியாக இருக்கிறதால. நான் ஒரு இடத்தில உட்கார்ந்திருக்கலாம். ஆனால் உங்க அசைவுகள் ஒவ்வொன்றையும் கண்காணித்து வருகிறேன். எனக்கு எதுவும் தெரியாது நினைக்காதீங்க. புள்ளிவிரமா தெரியும்.
100 மடங்கு யோசிப்பேன்
ஒவ்வொரு நாளும் நீங்க செய்கிற செயலால் ஒவ்வொருத்தரா சிக்கிக்கிட்டு இருக்கீங்க. இதுல உச்சத்துல இருக்கிறவங்கள கூட கோர்ட்டுக்கு கொண்டு வர முடியும். எனக்கு சட்டம் தெரியும். இதில் சிபிஐயே ஒழுங்கா பண்ணலன்னு சொன்னா, அவங்களையும் சேர்த்து எப்படி உள்ள கொண்டுவர முடியுமுன்னு தெரியும். எனவே சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கை திசை திருப்பும்படி போகாதீர்கள். அப்படி போனால் நான் பொறுப்பல்ல. நீங்க ஒரு மடங்கு யோசிச்சீங்கன்னா, நான் 100 மடங்கு யோசிப்பேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்.