பாகிஸ்தான் ஜைனாப் அன்சாரி... போரூர் ஹாசினி - தீர்ப்பும்... தண்டனைகளும்!
பாகிஸ்தான் சிறுமி ஜைனாப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஒரு மாதத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹாசினி கொலை வழக்கில் ஒரு ஆண்டுக்குப் பின்னர் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: பாகிஸ்தானில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஒரு மாதத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் ஹாசினி கொலை வழக்கில் ஓராண்டுகள் கழித்து இன்று குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாக பத்திரமாக வளர்த்து ஆளாக்குவது இன்றைக்கு பெரும் பாடாக இருக்கிறது. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் சிறுமி ஜைனாப் அன்சாரி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கும், போரூர் சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கும் இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்துள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கசூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஜைனாப் அன்சாரி கடந்த ஜனவரி 5ஆம் தேதி குரான் வகுப்புக்காக சென்றிருந்தபோது கடத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி ஜைனாப் பலாத்காரம்
ஜைனாப் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டதும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
சிக்கிய சீரியல் கொலைகாரன்
ஜைனாப்பை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க சுமார் 1,150 டிஎன் ஏ மாதிரிகள் திரட்டப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. வழக்கில் திருப்புமுனையாக சீரியல் கொலைகாரன் என்று அறியப்படும் இம்ரான் அலியை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.
குற்றவாளிக்கு தூக்கு
கடந்த ஒரு மாத காலத்தில் நடந்த விசாரணையின் முடிவில், இம்ரான் அலி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைகள் விதித்து பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த கொலை மற்றும் பலாத்கார வழக்கில் 1 மாதத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
எரித்துக்கொன்ற கொடூரன் தஷ்வந்த்
ஜைனாப் போலவே போரூர் சிறுமி ஹாசினியும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டவள்தான். கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த்திற்கு உடனடியாக தண்டனை வழங்கப்படவில்லை.
ஜாலியாக சுற்றிய தஷ்வந்த்
ஹாசினி கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை. போலீசார் கோட்டை விட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து ஈசியாக வெளியே வந்து சுற்றிக்கொண்டிருந்தான் தஷ்வந்த். தன்னை ஜாமீனில் எடுத்த பெற்றோர்களையே மிரட்டி பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த அவன் ஒரு கட்டத்தில் பெற்ற தாயையே கொலை செய்தான்.
தாமதமான தீர்ப்பு
சிறுமி ஹாசினி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டுள்ளார். ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை செய்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி தஷ்வந்த் குற்றவாளி தீர்ப்பளித்த நீதிபதி மரணதண்டனை விதித்துள்ளார்.
தெரிந்தவர்களே தப்பு செய்தனர்
சிறுமிகள் இருவருமே தெரிந்த நபர்களால் பலத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளனர். ஜைனாப் கொலை வழக்கில் ஒரு மாதத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹாசினி கொலை வழக்கில் ஓராண்டு கழித்து அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தாமதமாக கிடைத்த தீர்ப்புதான் என்றாலும் மரணதண்டனை அளிக்கப்பட்டது சரியானதே என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.