பரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்?
நெல்லை: தென்காசி நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஒருமாவட்டம் அமைய 20 ஆண்டு காலமாக தொடர்க்கோரிக்கைகள் முழக்கங்கள் எழுந்து வருகின்றன.இந்த நெல்லை மாவட்டத்தில் முக்கிய நகரமாக விளங்குவது தென்காசியும், சங்கரன்கோவிலும்தான்.
சங்கரன்கோவிலை எடுத்துக்கொண்டால் இந்த தொகுதியில் கருப்பாசாமி, ராஜலக்ஷ்மி ஆகிய இரண்டு அமைச்சர்களை தந்த தொகுதி ஆகும். கடையநல்லூரை எடுத்துக்கொண்டால் மஜீத், செந்தூர் பாண்டியன் ஆகிய இரண்டு அமைச்சர்களையும், அரசு கொறடா கா.மு.கதிரவவனையும் தந்த தொகுதியாகும்.
தென்காசி மக்களவை தொகுதியை எடுத்துக்கொண்டால் 20ஆண்டுகால லோக்சபா உறுப்பினர், 10ஆண்டுகால மத்திய இணை அமைச்சராக இருந்த அருணாச்சலத்தை தந்த தொகுதியாகும். இப்படி நெல்லை மாவட்டத்தின் மேற்குபகுதி பல்வேறு சிறப்புக்களையும், பெயர் சொல்லும் நபர்களையும் தந்தது.
அதுமட்டுமல்ல அரசியலில், நடிகரும் சமத்துவமக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததும் இந்த தொகுதிதான். தென்காசி தொகுதியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு பெருமையும், பெயரும் பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதியின் பெயரை தலைநகராகக் கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஆங்காங்கே அலையைபோல எழுந்துகொண்டு தானிருக்கிறது.
வசதிகள் இல்லை
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், த.மா.கா 1 முறையும், சமத்துவ மக்கள் கட்சி 1 முறையும் வென்றுள்ளது. இத்தனைக்கட்சிகள் தென்காசி தொகுதியில் வென்றாலும் ஒரே ஒரு அனைத்து வசதிகளும் இல்லாத, மாவட்ட மருத்துவமனையை மட்டுமே பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த கருப்பாசாமி பாண்டியன், சரத்குமார், உள்ளிட்டவர்கள் தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் கோரிக்கைகளை விடுத்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை.
ஆய்வு மேற்கொள்ளப்படும்
இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தென்காசியை மாவட்டமாக்கிட எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்ததோ அதிமுகவின் வேட்பாளராக போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு. அவரும் சட்டமன்றத்தில் 2016ல் இதுதொடர்பாக, கேள்வியை எழுப்பினர். அதற்க்கு நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டசபையில் தெரிவித்தார்.
நிர்வாக வசதி
திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளை கொண்டு பரந்து விரிந்திருக்கிறது. சுற்றுலா தலமான குற்றாலம், தமிழக-கேரள எல்லை பகுதி, 4 நகராட்சிகளை கொண்ட சட்டமன்ற தொகுதி, 8 நகராட்சிகளை கொண்ட நாடாளுமன்ற தொகுதி ஆகிய சிறப்புகளை கொண்ட தென்காசியை நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய தனிமாவட்டமாக அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பரந்து விரித்த நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளை கொண்டு பரந்து விரிந்திருக்கறது. எனவேதான், நிர்வாக வசதிக்காக, இம்மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தென்காசி தனி மாவட்டம்
தேர்தல் காலங்களில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அதற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவோர், பொதுமக்களுக்கு அளிக்கும் முக்கிய வாக்குறுதியாக, `தென்காசி தனி மாவட்டம்' இருந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக பல உறுப்பினர்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்கள், இது குறித்து ஆராயப்படும் என்ற பதிலையே தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்
திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தன.
அறிக்கை அனுப்புங்கள்
தமிழக கூடுதல் தலைமை செயலாளர் அமர்நாத், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ஷில்பா நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் ஏற்படுத்த, அரசு கருத்து கேட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், தென்காசி தனி மாவட்டமாக வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் கடிதம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தென்காசியை தனிமாவட்டமாக அறிவிக்க சாத்தியக்கூறுகள் இல்லை என மாவட்ட ஆட்சியர் அனுப்பிய கடிதம் போல ஒருக்கடிதம் முகவரி உள்ளிட்ட எதுவுமில்லாமல் வேகமாக வலம் வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலரை தொடர்புக் கொண்டு கேட்க முயன்றாலும் அவர் அலைபேசியை எடுத்து பதில் சொல்ல வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தொகுதியில் வலம் வரும் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருப்பது அந்த அறிக்கை கடிதம் உண்மையா என்று எண்ணத் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பலம்
நெல்லை மேற்கு மாவட்டத்தில் வசந்திமுருகேசன், பிரபாகரன் ஆகிய 2 அதிமுக லோக்சபா உறுப்பினர்கள், அமைச்சர் ராஜலக்ஷ்மி மற்றும் 2 சட்டசபை உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன் ஆகியோர் உள்ளனர். இதுதான் சரியான நேரம் 20 ஆண்டுகால மக்களின் கோரிக்கையை இவர்கள் அனைவரும் முயற்சி மேற்கொண்டால் தென்காசி மாவட்டமாக அறிவிக்க ஏராளமான சாத்தியக்கூறுகள் உள்ளன.