அடடா.. அம்மான்னு கூப்பிட்டா தப்பாப்பா.. தங்கத்துக்கு வந்த சோதனையைப் பாருங்க மக்களே!
Recommended Video
தேனி: மறைந்த ஜெயலலிதாவை வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா' என உச்சரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வனைக் கண்டு திமுகவினர் கடுப்பாகியுள்ளனராம்.
இவர் ஏன் இப்படி தொடர்ந்து அந்தம்மாவை அம்மா அம்மானு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதான் மாறி வந்தாச்சுல்ல, இதையும் மாத்திக்க வேண்டியதுதானே என்று எரிச்சல் காட்டுகிறார்களாம்.
தீவிர அதிமுக குடும்பம் தங்க தமிழ்செல்வனுடையது. அதிலும் ஜெயலலிதா இவரை வளர்த்து விட்ட விதத்திற்கு காலம் பூராவும் இவர்கள் அதிமுக விசுவாசிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் காலத்தின் கோலம், தங்க தமிழ்ச்செல்வன் "கேம்ப் மாறி" விட்டார்.
தங்கமான அம்மா
அமமுகவில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்க.தமிழ்ச்செல்வன் அண்மையில் திமுகவில் இணைந்தார். அடிப்படையிலேயே அவர் ஒரு ஜெயலலிதா விசுவாசி என்பது அனைவரும் அறிந்த செய்தி. வாய்க்கு வாய் அம்மா என்று சொல்லாமல் பேச்சை முடிக்க மாட்டார், பேச மாட்டார்.
ஜெ. தந்த மரியாதை
தங்க.தமிழ்ச்செல்வன் தனது மகள் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்க ஜெயலலிதாவிடம் சிபாரிசு பெற தயங்கினார். இதையறிந்த ஜெயலலிதா வாலன்ட்ரியாக தங்க.தமிழ்ச்செல்வனை அழைத்து எம்.டி. சீட் வாங்கிக் கொடுத்தார். அந்த அளவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் மீது அன்பைப் பொழிந்தவர் ஜெயலலிதா, அத்தனை மரியாதையும் கொடுத்து வைத்திருந்தார்.
பாசம் போகலையே
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், தினகரனை நம்பி சென்று அந்தப் பதவியை காவு கொடுத்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் விருப்பமின்றி போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னரும், 'அம்மா' 'அம்மா' என்றே அதிகம் உச்சரிக்கிறாராம்.
எரிச்சலாகும் திமுக
திமுக நிர்வாகிகளிடையே பேசும் போது கூட 'அம்மா சொன்னாங்க'.. 'அம்மா இருந்திருந்தாங்க' என்பன போன்ற வார்த்தைகளையே அதிகம் பிரயோகிக்கிறாராம். இதனால் சில நேரங்களில் திமுகவினர் எரிச்சல் அடைவதோடு, அண்ணே நீங்க இப்போ திமுகவில் இருக்கீங்க என அவருக்கு கவுன்டர் கொடுக்கிறார்களாம்.
அது வந்துண்ணே.. ஹிஹிஹிஹி
இதைக் கேட்டு தர்மசங்கடம் ஆகி விடுகிறதாம் தங்க தமிழ்ச்செல்வனுக்கு. ஆனாலும் ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கும் அவர், வழக்கமான தனது சிரிப்பையும், நகைப்பு மிக்க பேச்சையும் கொண்டு அவர்களை சமாளிக்கிறாராம். அம்மா என்று சொல்வதை இதுவரை அவர் நிறுத்தாமல் தொடர்கிறாராம்.
சுடுகாட்டு வரை விடாதுப்பே
இவரைப் போலவே, செந்தில்பாலாஜி, சேகர்பாபு போன்றவர்களுக்கு ஜெயலலிதா மேல் இன்னும் மரியாதை உள்ளது. ஆனால் அதை அவர்கள் பொதுவெளியிலோ, கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போதோ அறவே வெளிக்காட்டமாட்டார்கள். பாவம், தங்க.தமிழ்ச்செல்வனுக்கு பழக்கதோஷத்தை மறக்க நாட்கள் தேவைப்படும் அல்லவா. சும்மாவா சொன்னார்கள் மூதாதையர்கள், 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற பழமொழியை. அம்மாவோட தாக்கம் அப்படிண்ணே.. விட்ர முடியுமா!