கும்பகோணத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட இஸ்லாமியர்கள் கைது
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழலில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கோவையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக கட்சி அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் மீண்டும் காவல்துறை சோதனை நடத்தி வருகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
ஐநா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்பட வைகோ, வேல்முருகன் வலியுறுத்தல்
இந்த நிலையில் கும்பகோணம் மீன் சந்தை அருகே பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர், திடீரென கூடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் கைது செய்தனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.