டெல்டாவின் குரல்.. கஜாவிற்கு பின் நடக்கும் முதல் தேர்தல்.. லோக்சபா தேர்தலுக்கு காத்திருக்கும் தஞ்சை
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக கவனம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்றாக தஞ்சாவூர் தொகுதி மாறியுள்ளது.
தஞ்சாவூர்: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக கவனம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்றாக தஞ்சாவூர் தொகுதி மாறியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமான தஞ்சாவூர், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக வேகமாக தயாராகி வருகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்டு இருக்கும் தஞ்சாவூர் மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காகத்தான் காத்திருக்கிறார்கள்.
கஜா சேதமும், அதை தொடர்ந்து நடந்த மோசமான நிவாரண பணிகளும் கண்டிப்பாக வரும் லோக் சபா தேர்தலில் எதிரொலிக்கும்.
பெரும் முன்னேற்றம்
டெல்டா மாவட்டங்களின் முன்னேற்றத்தில் திடீர் பாய்ச்சல் காட்டிய தஞ்சாவூர் கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக முன்னேற்றம் அடைந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை விவசாயம் மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் முன்னேறியது. ஆனால் கஜா புயலால் தஞ்சை பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது. தஞ்சை மீண்டும் புத்துயிர் பெற இந்த லோக் சபா தேர்தல் உதவும்.
தஞ்சாவூர் எப்படி
தஞ்சாவூர் எப்போதும் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் கோட்டையாகத்தான் இருந்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் கடந்த லோக் சபா தேர்தல் கணக்குப்படி 13,40,050 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 6,62,576 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 6,77,474 பெண் வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூரில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது.
காங்கிரஸ் எப்படி
தஞ்சாவூரில் 18 லோக் சபா தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. 7 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை மட்டுமே அதிமுக வென்றுள்ளது. 1977ல் அதிமுக தஞ்சாவூரில் வென்றது. அதன்பின் 2014ல் கடைசியாக நடந்த லோக் சபா தேர்தலில்தான் தஞ்சாவூர் மீண்டும் அதிமுக வசம் வந்தது.
அதிமுக கே. பரசுராமன்
தற்போது தஞ்சாவூர் தொகுதி எம்.பி.யாக, அதிமுகவை சேர்ந்த கே. பரசுராமன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு 58 வயதாகிறது. தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் மூன்று முறை நீலகிரி ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பார்வை படவே, இவர் அதிமுக சார்பாக லோக் சபா தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்.
எப்படி வெற்றி
கடந்த 2014 லோக் சபா தேர்தலில் கே. பரசுராமன் 144119 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் மொத்தம் 510,307 வாக்குகள் பெற்றார். இவர் எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர் பாலு 366,188 வாக்குகள் பெற்றார்.
டி.ஆர் பாலு கணிப்பு
டி.ஆர் பாலுதான் தஞ்சாவூரில் வெற்றிபெறுவார் என்று எல்லோரும் கணித்ததை தவிடு பொடியாக்கி இவர் வெற்றிவாகை சூடினார். டி.ஆர் பாலுவையே வெற்றி கொண்டுவிட்டார் என்று இவர் மீது அதிமுகவில் புதிய மரியாதை ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களிலும் அது எதிரொலித்தது.
என்ன வரலாறு
ஒரத்தநாடு அருகே உள்ள புதூரில் பிறந்த கே. பரசுராமன் பூண்டி புஷ்பம் கல்லூரியில்தான் படித்தார். உள்ளூர் அரசியல் தெரிந்த இவர் அந்த தொகுதியின் மிகவும் வலுவான நபராக பார்க்கப்படுகிறார். காங்கிரஸ் - திமுக கோட்டையை அசைத்து பார்த்தும் அந்த உள்ளூர் அரசியல் அறிவுதான். முதல்முறை எம்.பியான இவர், பிஎஸ்சி படித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் எம்.பியாக இவரது செயல்பாடு மிகவும் சிறப்பாகவே இருந்துள்ளது.
செயல்பாடு
மற்ற அதிமுக எம்.பிக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். லோக் சபாவில் இவர் மொத்தம் 78 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். மிக முக்கியமாக 555 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதிமுக எம்.பிக்கள் சார்பாக அதிக கேள்வி எழுப்பியவர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவர் தனி நபர் மசோதா எதையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.
சராசரி
என்னதான் நிறைய கேள்விகள் கேட்டாலும் அட்டென்டென்ஸ் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே வாங்கியுள்ளார்.மொத்தம் 69% வருகை பதிவேடுதான் இவர் வைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் சராசரியாக எம்.பிக்கள் 78% வருகை பதிவேடு வைத்துள்ளனர். அதேபோல் இவர் தனக்கு வழங்கப்பட்ட 25 கோடி ரூபாய் எம்.பி நிதியில் 18 கோடியை செலவு செய்துள்ளார். பல்வேறு திட்டங்களுக்காக இவர் இந்த நிதியை செலவு செய்துள்ளார். 7 கோடி ரூபாய் இன்னும் செலவு செய்யப்படவில்லை.
தேர்தலை சந்திக்கும்
இந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த திமுக கூட்டணி முடிவெடுத்து உள்ளது. கஜா புயலை தொடர்ந்து 2019 தேர்தல் புயலுக்காக தஞ்சாவூர் தயாராகி வருகிறது. அதனால் இந்த தேர்தலில் தஞ்சாவூர் அதிக கவனம் பெற்றுள்ளது. கஜா புயலில் இருந்து மீண்டு வந்திருக்கும் இவர்கள் குத்தும் ஒவ்வொரு வாக்கும் டெல்டாவின் குரலாக ஒலிக்கும்!