குழந்தை போல் வளர்த்தோமே.. தவறான நேரத்தில் வந்த மழை.. அழுது துடிக்கும் டெல்டா விவசாயிகள்!
தஞ்சை: தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்
தவறான நேரத்தில் பெய்த மழை டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை இன்னமும் தீவிரமாக பெய்து வருவதால் இந்த மழையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாத நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தான்.
வேதனை
மழை பெய்யாமல் பொய்த்து போவதாலும், காவிரியில் கர்நாடகா நீர் திறக்காமல் போவதாலும் பாதிக்கப்படும் காவிர டெல்டா விவசாயிகள் இந்த முறை தான் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை இன்றி கடைமடை வரை தண்ணீர் வரத்து பெற்று சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள பயிர்களை இப்போது பெய்யும் மழை கடுமையாக பாதித்துள்ளது என்பது வேதனைக்குரிய உண்மை.
நெற்பயிர்கள்
வடகிழக்கு பருவ மழை இன்னும் ஓயவில்லை. இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்தது. இதனால் மாவூர், தென்னவராயநல்லூர், ஓடாச்சேரி, கூடூர், மாங்குடி, கொராடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கம் சம்பா நெற்பயிர் சாய்ந்தது.
20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்
இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.. இந்த மழையால் சூரக்கோட்டை, பூதலூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை, ஒரத்தநாடு, உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாய்ந்தது. புதுக்கோட்டையில் விடிய விடிய மழை பெய்தது. விராலிமலை அருகே துலக்கம்பட்டி, கீரனூர், மாத்தூர், மண்டையூர், தென்னலூர், இலுப்பூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது.
மழைக்கு பலி
கனமழையால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கனமழைக்கு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து துளசியம்மாள்(85) என்பவர் உயிரிழந்தார். ராமநாதபுரத்தில் உள்ள கே.கே.நகரில் தொடர் மழையால் நேற்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து கூலித்தொழிலாளி சண்முகம் (22) பலியானார். அவரது கர்ப்பிணி மனைவி தாயம்மாள் (20), உறவினர் மூர்த்தி படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோட்டைச்சாமி (61), கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.