தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 6 பேர் - 2 பேர் சடலமாக மீட்பு - தேடும் பணி தீவிரம்!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 6 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான எஞ்சியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்தில் 40 பேர் சுற்றுலா பயணிகளாக நேற்று இரவு புறப்பட்டனர். அவர்கள் இன்று காலை பூண்டி கோவிலுக்கு வந்தடைந்தனர். அவர்களில் சிலர் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக 6 பேர் ஆற்றில் திடீரென மூழ்கி மாயமானார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், உடனடியாக திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி, மாயமானவர்களை தேடி வந்தனர்.
தீயணைப்பு படையினர் நீண்டநேரம் தேடியதில் 2 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தூத்துக்குடி சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ் மற்றும் பிருத்திவிராஜ் என்பது தெரியவந்தது.
மேலும், ஆற்றில் மாயமான தாவீத், ஹெர்மெஸ், ஈசாக், பிரவீன்ராஜ் ஆகியோரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேடும் இடத்தில், தண்ணீர் அதிகமாக இருப்பதால் படகு மூலம் தேடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து பூண்டிக்கு வந்த 40 பேரில், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் மாயமான நிலையில், 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டோவ பாருங்க.. 6 வகை புருவங்கள்.. உங்களது குணங்களை நீங்களே அறிய நல்ல வாய்ப்பு!