நள்ளிரவு.. சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்!
கஜா புயலுக்கு 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டுக்கோட்டை: கஜா புயலை விட கொடுமையான, கொடூரமான செயலைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள்... அந்த செய்திதான் இது!!
கஜா... பட்டுக்கோட்டை பக்கமாக போகும்போது தந்துவிட்டுபோன அழிவு கொஞ்சம் நஞ்சமல்ல. நடுராத்திரி... அப்படி ஒரு பேய்க்காத்து.. ஊரே தூக்கிட்டு போற மாதிரி காற்று சுழட்டி அடித்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது.
அணைக்காடு கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கிறாள் அந்த சிறுமி. திடீரென்று வயசுக்கு வந்துட்டாள். அதனால் வீட்டு பெரிசுகள் எல்லாம் சேர்ந்து தீட்டு என்று காரணம் சொல்லி, அந்த சிறுமியை தனியாக உட்கார வைத்து விட்டார்கள். உட்கார வைக்கப்பட்ட இடம் எது தெரியுமா? வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற தென்னை மர தோப்புலதான்.
[9300 மரங்கள்.. 40 வீடுகள்.. 1570 மின் கம்பங்கள்.. கஜாவால் பெரும் சேதத்தை சந்தித்த திருச்சி!]
பயமுறுத்திய கஜா
சுத்தி எங்கேயும் வீடுகள் இல்லை.. வெறும் தென்னந்தோப்புதான். அங்கதான் அந்த சிறுமி ராத்திரி பகலா தங்கணும்னு சொல்லிட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு ராத்திரியில்தான் கஜா வந்தான்... மாநிலத்தையே மிரட்டிட்டு போன கஜா சிறுமியை சும்மா விட்டு வைத்திருப்பானா என்ன? சுழன்று சுழன்று காற்றிலேயே பயமுறுத்தினான்.
சிறுமியின் அலறல்
நடுராத்திரி... 2 மணி... சுற்றிலும் இருட்டு.. கருப்பு போர்வைக்குள் கஜா சத்தத்தை கேட்டு குழந்தை அலறினாள்... பயந்து மிரண்டு கதறினாள்.. சத்தம் கஜாவை தவிர யாருக்குமே கேட்கவில்லை. புயல் காற்றுக்கு நடுநடுவே மரங்கள் முறிந்து விழும் சத்தத்தை கேட்டே பாதி செத்துவிட்டாள் சிறுமி. அதில் ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்து குடிசை மீது விழுந்து, பிறகு சிறுமி நெஞ்சில் விழுந்து.. சிறுமியின் அலறல் வீறிட்டு அடங்கி நின்றது!!
நெஞ்சில் சாய்ந்த தென்னை
பொழுது விடிந்து பார்த்து, குழந்தையை பிடித்து அணைத்து கொண்டு அழுது என்ன பயன்? தென்னை மரத்தை தூக்கிட்டு மகளை முழுசா வெளியே எடுக்கவே அவ்வளவு நேரம் ஆயிடுச்சு. எவ்வளவு நேரம் தெரியுமா? 20 மணி நேரம்... அந்த பிஞ்சு உடம்பில் சாய்ந்த கிடந்தது அந்த நெடுமையாக உயர்ந்த மரம்!
இப்படி ஒரு கூட்டமா?
இப்படி ஒரு கூட்டமா? ஊரெல்லாம் காத்தும், மழையும் அடிக்கும்போது கூடவா பெத்த மகளை பத்தி கவலைப்படாமல் ஜீவன்கள் இரவை கழித்திருக்கும்? நாசமா போன பிற்போக்குத்தனமும் மூடநம்பிக்கையும் என்னைக்குத்தான் போய் ஒழியுமோ தெரியவில்லை. நடுராத்திரி கும்மிருட்டில் சிறுமியின் கடைசி தவிப்பையும் துடிப்பையும் கதறலையும் அலறலையும் கூடவே சேர்த்துகொண்டு போய்விட்டான் கஜா!