நாச்சியார்கோவில் டூ தஞ்சைக்கு.. 70 கிமீ. தூரம்.. 8 மணிநேரம் சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி முதியவர்
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 73 வயது முதியவர் ஒருவர் 70 கி.மீ. தூரம் சைக்கிளில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கார், ஆட்டோக்கள் மட்டும் மாவட்டத்துக்குள் இயக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் அருகே உள்ள ஏனாநல்லூர் வடக்குத் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நடேசன் (73), தனக்கு நிவாரணம் கேட்டு அதிகாரிகளை அணுகினார்.
லாக்டவுன் - முடங்க கூடாது.. வாழ்ந்து காட்ட முன்னுதாரணமாக திகழும் தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன்
அடையாள அட்டை
அப்போது அதிகாரிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை இருந்தால்தான் நிவாரணம் வழங்க முடியும் என்றார்கள். மேலும் அடையாள அட்டை பெற தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செல்லுமாறும் கூறினர்.
போக்குவரத்து
ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார் நடேசன். பஸ்கள் இயங்காததால் சைக்கிளிலேயே தஞ்சைக்கு செல்வது என முடிவு செய்தார். அதன்படி ஏனாநல்லூரில் இருந்து 70 கி.மீ. தூரம் சைக்கிளில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
கோவிந்தராவ்
பின்னர் அவர் ஆட்சியர் கோவிந்தராவிடம் தனக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என கேட்டார். பின்னர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரியை அழைத்த ஆட்சியர் நடேசனின் கோரிக்கை குறித்து தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள், அவருக்கு உரிய விண்ணப்பத்தை வழங்கி, அதில் கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரிடம் சான்றிதழ் வாங்கி வருமாறு தெரிவித்தனர்.
வியாபாரம்
இதையடுத்து அவர் கும்பகோணத்துக்கு மீண்டும் சைக்கிளிலேயே புறப்பட்டு சென்றார். இதுகுறித்து நடேசன் கூறுகையில் சிறுவயதில் மாடு என் காலை மிதித்து விட்டதால் ஊனமாகிவிட்டது. விவசாயியான நான் சைக்கிளில் கோலமாவு வியாபாரம் செய்து வருகிறேன்.
அடையாள அட்டை
இரு ஆண்டுகளுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் வழங்கவில்லை. கொரோனா நிவாரணம் பெற அடையாள அட்டை கேட்டார்கள். அதிகாலை 3 மணிக்கு சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பினேன்,. தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தேன் என்றார் நடேசன்.